பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று புதன்கிழமை முதல் தொடங்குகிறது. இதில் இந்திய அணி குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.
இந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட முடியும். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சூப்பர் 8 சுற்று குறித்து தெரிவித்துள்ள கருத்தை தற்போது பார்க்கலாம்.

தற்போது சூப்பர் 8 சுற்று ஆரம்பிக்க இருக்கின்றது. இதை நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த சுற்றி ஸ்பெஷலான விஷயத்தை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொரு வீரருக்கும் இருக்கின்றது. இந்த சுற்றில் பெரிய ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றோம். இதனால் ஒவ்வொரு பயிற்சியையும் நாங்கள் உத்வேகத்துடன் மேற்கொண்டு வருகின்றோம்.
நாங்கள் முதல் போட்டியை விளையாடிய பிறகு அடுத்த இரண்டு போட்டிகள் 3 அல்லது 4 நாட்கள் இடைவெளியில் நடைபெறுகிறது. இது நிச்சயம் எங்களுக்கு கடும் சவால்களை அளிக்கும். ஆனால் இதை எல்லாம் நாங்கள் ஏற்கனவே பழகி விட்டோம். இப்படி போட்டிகளில் விளையாடுவதற்காக நாங்கள் பலமுறை பயணம் செய்திருக்கின்றோம். எனவே இதை ஒரு காரணமாக நாங்கள் சொல்ல மாட்டோம்.
அமெரிக்கா போல் இல்லாமல் வெஸ்ட் இண்டீஸில் பல்வேறு மைதானங்களில் நாங்கள் ஏற்கனவே விளையாடி இருக்கின்றோம். இதனால் அந்த அனுபவம் எங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். போட்டியின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வர ஒவ்வொரு வீரர்களும் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இதனால் இந்த போட்டியை எதிர்கொள்ள மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று ரோகித் சர்மா கூறினார். இந்தியா தங்களது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வரும் இருபதாம் தேதி வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. அதன் பிறகு சனிக்கிழமை 22 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராகவும் திங்கட்கிழமை 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்தியா விளையாடுகின்றது.