துபாய்: மகளிர் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
மகளிருக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து களமிறங்கியது. இந்த போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது. இதனால் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிகரமான டி20 உலகக்கோப்பையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டெவின் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 57 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். அதேபோல் கடைசி நேரத்தில் ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்தது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறியது.
இதன்பின் 161 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதுவரை டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி ஒருமுறை கூட 150 ரன்களுக்கு மேலாக இலக்கை சேஸ் செய்து வென்றதில்லை. இதனால் புதிய வரலாறு படைக்கும் நோக்குடன் இந்திய அணி நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
2வது ஓவரிலேயே ஷஃபாலி வர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஸ்மிருதி மந்தனா - ஹர்மன்ப்ரீத் கூட்டணி இணைந்தது. அதிரடியாக விளையாட முயன்று ஸ்மிருதி மந்தனா 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த சில ஓவர்களிலேயே கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பவர் பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்தது.
பின்னர் வந்த ஜெமீமா ரோட்ரிக்ஸ் 13 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 12 ரன்களிலும், அருந்ததி ரெட்டி 1 ரன்னிலும், தீப்தி சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 19 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இந்திய அணி தரப்பில் ஒரு வீராங்கனை கூட 15 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை. அதேபோல் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கடினமானதாக பார்க்கப்படுகிறது.