நியூயார்க் : இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கும் மைதானத்தின் பவுண்டரி எல்லை வெறும் 60 மீட்டர் தூரமே இருப்பது ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில், 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 20 அணிகளும் 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு, அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றில் மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடக்கவுள்ளன. இதற்காக அதிவேகமாக ஒரு மைதானத்தில் அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
இந்த மைதானத்தில் 34 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது. ஏனென்றால் டெல்லி மைதானத்தை விடவும் குறைவாக பவுண்டரி எல்லைகள் அமைக்கப்பட்டுள்ளன. 60 முதல் 65 மீட்டர் தூரம் மட்டுமே பவுண்டரி எல்லைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பிட்ச்களும் தற்காலிகமானவை என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே போட்டிகள் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் நடக்கும் லீக் போட்டிகள் அனைத்து பேட்டிங் கண்காட்சியை போல் இருக்கும் என்றும், எவ்வளவு குறைவாக சிக்ஸ் விட்டுக் கொடுக்கிறோம் என்பதே பவுலர்களின் கணக்காக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பயிற்சி மைதானங்களே இந்திய அணி வீரர்களுக்கு போதுமான வசதிகள் செய்யவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. தற்போது மைதானத்தின் எல்லைகளும் சிறிதாக இருப்பதோடு, திறந்த வெளி மைதானமாக உருவாக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.