நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான குரூப் சுற்று போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தப் போட்டி நடக்க உள்ள நியூயார்க் நாசா கவுன்டி மைதான பகுதிகளில் போட்டி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) அன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டி அமெரிக்க நேரப்படி காலை 10:30 மணிக்கு துவங்க உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி துவங்கும்.

நியூயார்க்கில் காலை 11 மணி அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையின்படி சரியாக காலை 11 மணிக்கு 51 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மாலை 4 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை கூறி உள்ளது.
51 சதவீதம் வாய்ப்பு மட்டுமே இருப்பதால் லேசான தூறலுடன் மழை நிற்கவும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், மழை பெரிதாக பெய்து போட்டி தடைபடவும் வாய்ப்பு உள்ளது. இது பகல் நேரத்தில் நடக்கும் போட்டியாக இருந்தாலும் விதிகளின்படி அதிகபட்சம் 5 மணி நேரத்திற்குள் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.
அதற்கு மேல் சென்றால் போட்டி கை விடப்படும். எனவே, மழை 4 மணிக்கு நின்றாலும் அதற்கு மேல் போட்டியை நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கு ரிசர்வ் நாள் எதுவும் இல்லை. அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தப் போட்டியை வைத்து அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் பல லட்சம் ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. ஒரு வேளை போட்டி ரத்தனால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கள்ளச் சந்தையில் டிக்கெட் வாங்கிய அனைவரும் பேரிழப்பை சந்திப்பார்கள்.