நியூயார்க் : 2024 டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ளது. அதிலும் இந்தியா ஆடும் உலகக்கோப்பை போட்டிகள் அனைத்துமே அமெரிக்காவில் நடைபெறும் படி தொடரை வடிவமைத்து இருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால், அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் தான் போட்டியை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஆனால், நியூயார்க்கில் பெரிய கிரிக்கெட் மைதானம் இல்லாத நிலையில் கடந்த எட்டு மாதங்களாக மைதானத்தை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அந்த மைதானத்தில் மிக முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அதற்கான டிக்கெட்கள் விற்கப்பட்டு விட்டது. ஆனால், இன்னமும் அந்த மைதானம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த மூன்று மாதங்களில் அங்கே நடந்த பணிகளை வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறது. அதன் முடிவில் இன்னும் மைதானத்தின் தரைப் பகுதியே முழுமையாக தயாராகவில்லை என தெரிகிறது.

ஆடுகளத்தின் புல்வெளியை தயார் செய்த பின், பிட்ச்சை தயார் செய்ய வேண்டும். அத்துடன் ரசிகர்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். அதற்கான கட்டுமானப் பணிகளும் இன்னும் முடிக்கப்படவில்லை. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த "பொட்டல் காட்டிலா இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி நடைபெறப் போகிறது?" என தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
2024 டி20 உலகக்கோப்பை ஜூன் 2ஆம் தேதி துவங்க உள்ளது. அதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அதற்குள் அந்த பணிகள் முடிந்து விடும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நம்பினாலும் ரசிகர்களுக்கு அந்த நம்பிக்கை ஏற்படவில்லை. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்க முடிவு செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், மைதானத்தை ஓராண்டுக்கு முன்பே கட்டத் துவங்கி இருக்க வேண்டும் அல்லது அமெரிக்காவில் இருக்கும் வேறு கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகளை நடத்த வேண்டும்.