துபாய்: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய வாழ்வா சாவா ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொண்டு இன்று விளையாடியது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய வீராங்கனை செபாலி வர்மா பொறுப்புடன் விளையாடி 40 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். எனினும் மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்மிருதி மந்தானா 38 பந்துகளில் 50 ரன்கள் விளாசிசி துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

ஸ்மிருதி இன்னிங்ஸில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதனை அடுத்து யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் தன்னுடைய வாழ்நாளில் சிறந்த ஆட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தினார். 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 52 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரி,ஒரு சிக்சர் அடங்கும்.
இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 192 என்ற அளவில் இருந்தது. இறுதியில் ஜெமிமா 10 பந்துகளில் 16 ரன்கள் சேர்க்க இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கில் இலங்கை அணி களம் இறங்கியது. இதில் ஆரம்பம் முதலில் இந்திய அணியில் வீராங்கனைகள் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தனர்.
குறிப்பாக ரேணுகா இலங்கை வீராங்கனைகளில் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார். அந்த அணியில் அனுஷ்கா 20 ரன்களும் கவிதா தில்காரி 21 ரன்களும், ஆமா கஞ்சனா 19 ரன்களும் எடுக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களின் ஆட்டம் இழந்தனர். இதனால் 19.5 ஓவர் முடிவில் இலங்கை மகளிர் அணி 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது.
இந்திய வீராங்கனை ரேணுகா சிங் இரண்டு விக்கெட்டுகளும் அருந்ததி ரெட்டி மூன்று விக்கெட்டுகளும் ஆஷா ஷோபனா மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய மகளிர் அணியின் ரன் ரேட் கிடு கிடுவென உயர்ந்து, தற்போது மைனஸிலிருந்து பிளஸ் 0.576 என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. புள்ளி பட்டியலில் இந்திய மகளிர் அணி தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.