துபாய் :மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 160 ரன்கள் எடுக்க, இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 102 ரன்களில் சுருண்டது.
இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவி இருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது. இனி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.

இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், நாங்கள் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. இனி அரையிறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும். நாங்கள் விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு ஏற்படுத்தினோம்.
ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் நியூசிலாந்து அணி எங்களை விட சிறந்து விளையாடினார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பில்டிங்கில் நாங்கள் சில தவறுகளை செய்து விட்டோம். எனவே இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இனி வரும் போட்டிகளில் அதை சரி செய்ய வேண்டும்.
160 ரன்கள் என்ற இலக்கு எல்லாம் நாங்கள் பலமுறை வெற்றிகரமாக சேஸ் செய்து இருக்கிறோம். எனவே இந்த ஆட்டத்திலும் நாங்கள் அதை வெற்றிகரமாக எட்டுவோம் என்று தான் நினைத்தேன். இந்த போட்டியில் யாராவது ஒரு வீராங்கனை நிலைத்து நின்று ஆடி இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டோம். எங்கள் அணியை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.
நாங்கள் மீண்டும் வருவோம். நான் எதிர்பார்த்த தொடக்கம் இதுவல்ல. ஆனால் இந்த கட்டத்தில் இருந்து நாம் சிறப்பாக விளையாட வேண்டிய சூழலில் இருக்கின்றோம் என்று ஹர்மன்பிரித் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் டிவைன், தங்கள் அணி வீராங்கனைகளை நினைத்து பெருமை கொள்கின்றேன்.
இந்தியா போன்ற உலக தரம் வாய்ந்த அணியை எதிர்கொண்டு வீழ்த்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது இந்த போட்டியை நாங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தோம். இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு அதிக நம்பிக்கை கிடைத்திருக்கிறது என்று அவர் கூறினார். இதனிடையே, இந்திய மகளிர் அணி நாளை ஞாயிற்றுகிழமை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.