கிங்ஸ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் வெளியேற்றி இருப்பது தான் அதற்கு முக்கிய காரணம்.
இந்த உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றன. இந்த பிரிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வலுவான அணிகள் என்பதால் அந்த இரண்டு அணிகளுமே முதல் இரண்டு இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான். அதன் காரணமாக, ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் போனது. ஏற்கனவே 2023 ஒரு நாள் போட்டி தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்து இருந்ததால் அந்த அணி மீது வெறுப்பில் இருந்த இந்திய ரசிகர்கள், தற்போது அந்த அணி அரை இறுதி சுற்றுக்கு முன்பே வெளியேறி இருப்பதால் அதை கொண்டாடி வருகிறார்கள்.
ஒருவேளை இந்த உலகக் கோப்பையிலும் அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா முன்னேறி இருந்தால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மீண்டும் ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கலாம். ஏற்கனவே, 2003 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகளில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்து இருந்ததால் மீண்டும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி இந்திய ரசிகர்களுக்கு இல்லை.
இந்த நிலையில் தான், ஆப்கானிஸ்தான் அணி விஸ்வரூபம் எடுத்து சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அடுத்து வங்கதேச அணியை வீழ்த்தினால் ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்பு பறிபோகும் என்ற நிலையில் இருந்தது. அதை உறுதி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தான் வங்கதேச அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது அரை இறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணியையும், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணியையும் சந்திக்க உள்ளன. அரை இறுதியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.