நியூ யார்க் : இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் கேண்டியாக் பார்க் மைதானத்தில் போதுமான வசதிகள் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் 2 நாட்களில் நியூயார்க்கில் தொடங்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்காக நியூயார்க், டல்லாஸ், ஃபுளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிற்சி செய்வதற்காகவும் சில மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை யாவும் தற்காலிக ஏற்பாடுகளாக மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் 4 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கேண்டியாக் பார்க் பகுதியில் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும், இந்திய அணி விளையாட மைதானத்திற்கும் இடையில் நீண்ட தூரம் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்கு ஏற்றவாறு மைதானங்களும், ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
இந்திய அணி தரப்பில், எல்லாமே தற்காலிக ஏற்பாடு தான். பிட்சில் இருந்து அனைத்துமே தற்காலிகமானது. அனைத்துமே சராசரியாக செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடர் தொடர்பாக எந்தவித நிகழ்ச்சிகளும் செய்யப்படாத நிலையில், பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளது.
அதேபோல் நியூ யார்க் மற்றும் டால்லஸில் ஏற்பட்ட புயல் காரணமாக மைதானங்களும் சிதைந்துள்ளன. சில மைதானங்களில் எல்இடி ஸ்க்ரீன் முற்றிலும் சிதைந்துள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பையை அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்ற ஐசிசி நிர்வாகத்தின் முடிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பயிற்சி மைதானங்களில் போதுமான வசதிகள் இல்லை என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஏற்கனவே ஐசிசி நிர்வாகிகளிடம் கூறிவிட்டதாக தகவல் வெளி வந்துள்ளது. ஆனால் இந்திய அணி திட்டமிட்டபடி ஜூன் 15ஆம் தேதி வரை அமெரிக்காவில் நடக்கவுள்ள லீக் போட்டிகளில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.