அகமதாபாத் : 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறியது. அதன் பின் பல இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவ வீரர்களுடன் இளம் வீரர்களும் இணைந்த அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், தற்போது நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாட்டையும் கண்காணித்து வந்த தேர்வுக் குழு அதன் அடிப்படையில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்து இருக்கிறது.
ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என சிலர் கூறி வந்த நிலையில் அவரை துணை கேப்டனாக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. சுமார் 15 மாதங்கள் கழித்து ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். அவரே முதன்மை விக்கெட் கீப்பராகவும் இருக்கப் போகிறார். அதே போல சஞ்சு சாம்சன் அதிரடியாக இடம் பெற்று இருக்கிறார். அவர் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருக்கிறார். சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபேவுக்கும் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுழற் பந்துவீச்சாளர் சாஹல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ்
(மாற்று வீரர்கள் - சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மது, ஆவேஷ் கான்)
இது முதற்கட்ட அணி மட்டுமே. உலகக்கோப்பை தொடங்கும் முன் இந்த அணியில் மாற்றம் செய்ய ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது.