மும்பை : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரால் மோசமான மனநிலையில் இருப்பதாக சில விமர்சகர்கள் கருத்து கூறி உள்ளனர். இதன் காரணமாக இந்திய அணி வீரர்களால் உலகக் கோப்பை வெல்ல முடியுமா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.
2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று முடிவடைந்து இறுதிப் போட்டி நடக்க உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் 15 வீரர்களில் எந்த வீரரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடப் போவதில்லை. இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் எந்த வீரரும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளில் இடம் பெறவில்லை. இந்த தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருந்த வீரர்களில் ஐந்து பேர் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சேர்ந்த விராட் கோலி மற்றும் முகமது சிராஜ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் என ஐந்து பேர் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியுடனும், ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது தகுதிப் போட்டியுடனும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறின. இதை அடுத்து இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் 15 வீரர்களில் ஒருவர் கூட ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடப் போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் என இந்திய அணியின் 4 முக்கிய வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். அந்த அணி ஐபிஎல் தொடரில் லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. அது அந்த அணி வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்த சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரிஷப் பண்ட் அக்சர் படேல், குல்தீப் யாதவ், பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் என அனைவருமே ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு தங்கள் அணி முன்னேறவில்லை என்ற மன அழுத்தத்தில் உள்ளனர்.
இன்னும் 9 நாட்களில் இந்திய அணி தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது. அதற்குள் இந்திய வீரர்கள் மனதளவில் தங்கள் ஐபிஎல் செயல்பாடுகளினால் ஏற்பட்ட அதிர்வலைகளில் இருந்து வெளி வருவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு கூட முன்னேற முடியாத இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை வென்று தருவார்களா? உலகக்கோப்பையை இந்திய ரசிகர்கள் மறந்து விட வேண்டியது தான் என சில ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதே சமயம், ஐபிஎல் வேறு, டி20 உலகக் கோப்பை வேறு. இந்திய வீரர்கள் நிச்சயம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரே அணியாக சேர்ந்து செயல்படும் போது சிறப்பாக ஆடுவார்கள் என சிலர் நம்பிக்கை அளிக்கும் உள்ள வகையில் கருத்து கூறியுள்ளனர். என்ன நடக்கிறது என பார்க்கலாம்.