நியூயார்க் : டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்திற்கு கிரிக்கெட் உலகம் இதுவரை காணாத அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதிலும் உச்சகட்டமாக "ஸ்னைப்பர்" வீரர்களும் அழைக்கப்பட்டு உள்ளனர். தூரத்தில் இருந்து துல்லியமாக இலக்கை தாக்கும் ஸ்னைப்பர் வீரர்கள் மைதானத்தை சுற்றிலும் தொலைதூரத்தில் இருந்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
2024 டி20 உலக கோப்பை தொடரின் முக்கிய போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளன. 3ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை நியூயார்க் நகரில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் தீவிரவாத அமைப்பு ஒன்று இந்தியா - பாகிஸ்தான் ஆடும் போட்டிக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அது குறித்து நியூயார்க் நகர அதிகாரிகள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை.

எனினும், நியூயார்க் மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நாட்டின் தலைவருக்கு வழங்கப்படும் ஸ்னைப்பர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாசா கவுண்டி மைதானத்தை சுற்றிலும் பல்வேறு இடங்களில் ஸ்னைப்பர் வீரர்கள் இருப்பார்கள். அவர்கள் போட்டி நடக்கும் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். ஏதேனும், அசம்பாவிதம் நடந்தால், அவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் கட்டளையின்படி சந்தேகத்திற்குரிய நபரை சுட்டு வீழ்த்த முடியும்.
இது மட்டுமின்றி நியூயார்க் நகர ஸ்வாட் டீம் எனப்படும் சிறப்பு படை, நாசா கவுண்டி காவல் துறை, நார்கோடிக்ஸ் அதிகாரிகள், மற்றும் எஃப்பிஐ, அமெரிக்க ஹோம் லாண்ட் செக்யூரிட்டி, நியூ மாகாண காவல் துறை என பல்வேறு பிரிவினர் இந்த உலகக் கோப்பை தொடருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதிலும், குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது அதிக கட்டுப்பாடுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த மைதானத்தின் நுழைவாயிலில் விமான நிலையத்தில் இருப்பது போன்ற சோதனைக் கூடம் இருக்கும். அதை தாண்டி தான் உள்ளே நுழைய முடியும்.
உலகக் கோப்பை தொடர் முடியும் வரை நாசா கவுண்டி மைதானத்திற்கு அருகே உள்ள பூங்காவை மூடி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இடத்தில் இருந்து டிரோன்களை இயக்கி மைதானத்தை தாக்கலாம் என்ற அச்சம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய அணிக்கும் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விராட் கோலி எங்கு சென்றாலும் அவரை சுற்றிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் உடன் செல்கின்றனர். கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு தொடருக்கும், எந்த ஒரு போட்டிக்கும் இப்படி ஒரு பாதுகாப்பு வழங்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கான பாதுகாப்பு வழங்கப்பட தீவிரவாத அச்சுறுத்தல் மட்டுமே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.