மும்பை : டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பியூஷ் சாவ்லா எச்சரித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சூப்பர் 8 சுற்று போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடக்கவுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் வழக்கம் போல் அதிக ரன்களை ஒவ்வொரு அணியாலும் ஸ்கோர் செய்ய முடியும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் சூப்பர் 8 சுற்றுக்கான 2 குரூப்களிலும் இடம்பெற்றுள்ள அணிகள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அந்த வகையில் இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப்பில் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேசம் அணி இன்னும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறவில்லை.
இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூப்பர் 8 சுற்று தொடர்பாக இந்திய அனுபவ வீரர் பியூஷ் சாவ்லா பேசுகையில், ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியா அணி அளவிற்கு பயங்கரமான அணி யாரும் கிடையாது. அவர்களால் எந்த அணியையும் எளிதாக வீழ்த்த முடியும். ஏற்கனவே இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி வென்று சென்றுவிட்டனர்.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலேயே முகாமிட்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் பிட்சில் பவுலிங் செய்வதை ஆஃப்கானிஸ்தான் பவுலர்கள் மகிழ்ச்சியாக செய்து வருகின்றனர். வங்கதேச அணியை பொறுத்தவரை சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆனால் இன்னும் சவாலளிக்க கூடிய அளவிற்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
நிச்சயம் பலமான அணி என்று வங்கதேசத்தை கருத முடியாது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆட்டங்களை சாதாரணமாக எடுக்க கூடாது. கொஞ்சம் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும் என்று எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலேயே விளையாடி வரும் நிலையில், சூப்பர் 8 சுற்றில் தான் இந்திய அணி முதல்முறையாக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.