சென்னை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நாள் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளது. டி20உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதவுள்ளன. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அனைத்து அமெரிக்காவிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் மூலம் புதிய வர்த்தக்கப் பாதையை அமைத்துள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை மூலம் அமெரிக்காவில் வருவாயை அதிகரிக்க முடியும். இதனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. அதில் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்திலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் மைதானத்திலும் நடத்தப்படவுள்ளது.
அதேபோல் ஜூன் 12ஆம் தேதி இந்தியா - அமெரிக்கா அணிகள் விளையாடும் போட்டியும், ஜூன் 15ஆம் தேதி ஃபுளோரிடாவில் நடக்கும் போட்டியில் இந்தியா - கனடா அணிகளும் விளையாடவுள்ளது. ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், சிராஜ் மற்றும் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங், சுப்மன் கில், ஆவேஷ் கான் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோர் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க நாளை மறுநாள் அமெரிக்காவுக்கு புறப்படவுள்ளது. மே 26ஆம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் அமெரிக்காவுக்கு புறப்படவுள்ளனர். இதனால் ராஜஸ்தான் மற்றும் கேகேஆர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் புறப்பட முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகியோர் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் அமெரிக்காவுக்கு புறப்படவுள்ளனர். இந்திய அணிக்கு முதல் போட்டி ஜூன் 5ஆம் தேதி என்பதால், பயிற்சியில் எந்த பின்னடைவும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.