ஹராரே: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா கட்டிக் காத்து வந்த இந்திய அணியின் ரெக்கார்டு ஒன்றை கேப்டன் ஆன முதல் போட்டியிலேயே சுப்மன் கில் சுக்கு நூறாக உடைத்து இருக்கிறார். அதுவும் அனுபவம் இல்லாத ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த முதல் டி20 போட்டிக்கு முன் இந்திய அணி தொடர்ந்து 12 சர்வதேச டி20 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி பெற்று இருந்தது. முன்னதாக 2023 டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.

அதன் பின் நடந்த ஆப்கானிஸ்தான் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் மூன்று போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது. அதன் பின் 2024 டி20 உலகக் கோப்பையில் குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் எட்டு போட்டிகளில் இந்திய அணி ரோஹித் சர்மா கேப்டன்சியில் தொடர்ந்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 12 டி20 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வெற்றி பெற்று இருந்தது. இன்னும் இரண்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெற்றி அடைந்தால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற இமாலய சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அதற்கு ஏற்ப அனுபவம் குறைந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்றது. ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று மூத்த வீரர்கள் சர்வதேச டி20-இல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். உலகக் கோப்பையில் ஆடிய மற்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இளம் வீரர்கள் கொண்ட அணி ஜிம்பாப்வே டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறது. அந்த அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியாமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்த பேட்டிங் செய்த இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியின் தொடர் வெற்றி சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி இரண்டு சூப்பர் ஓவர்களில் ஆடி, போராடி வெற்றி பெற்று இருந்தது. அப்படி இந்த சாதனையை கேப்டன் ரோஹித் சர்மா கட்டிக் காப்பாற்றி வந்தார். அதன் பின் உலக கோப்பையில் சரியான திட்டமிடலோடு, அனைத்து சூழ்நிலைகளையும் சமாளித்து இந்திய அணி தொடர்ந்து எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. கேப்டனாக ரோஹித் சர்மா கட்டிக் காத்து வந்த இந்த தொடர் வெற்றிப் பயணத்துக்கு சுப்மன் கில் மூடு விழா நடத்தி இருக்கிறார்.