டரூபா : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் நியூசிலாந்து அணி வெளியேறி உள்ளது. உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக கருதப்படும் நியூசிலாந்து அணி குரூப் சுற்றுடன் வெளியேறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதுவரை நியூசிலாந்து அணி எந்த உலகக் கோப்பையும் வெல்லாத போதும் அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் அந்த அணி முதல் நான்கு இடங்களில் இடம்பெறும். அந்த அணி பல முறை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதேபோல, 2024 டி20 உலகக் கோப்பை தொடரிலும் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்று மற்றும் அரை இறுதி வரை முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், குரூப் சுற்றுடன் அந்த அணி வெளியேறி ஏமாற்றத்தை அளித்து உள்ளது. குரூப் "சி" பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளுடன் நியூசிலாந்து அணி இடம் பெற்று இருந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் 84 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி தனது குரூப் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகளில் ஆட உள்ளது. ஆனால், அதற்கு முன்னரே ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தாங்கள் ஆடிய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பிடித்து விட்டன.
அந்த அணிகள் இரண்டும் கடைசி போட்டியில் சந்திக்க உள்ளன. அதில் எந்த அணி வெற்றி பெற்றாலும், தோல்வி அடையையும் அணியும் சேர்த்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. நியூசிலாந்து அணி தனக்கு மீதம் உள்ள இரண்டு போட்டிகளிலும் எத்தனை பெரிய வெற்றி பெற்றாலும் நான்கு புள்ளிகள் மட்டுமே பெற முடியும் என்பதால் குரூப் சுற்றில் அதிகபட்சம் மூன்றாவது இடத்தை மட்டுமே அந்த அணியால் பிடிக்க முடியும்.
ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் நியூசிலாந்தின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்துள்ளது. நியூசிலாந்தின் இந்த மோசமான நிலைமைக்கு காரணம் ஐபிஎல் தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டாம் கட்ட நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. அதனால் நியூசிலாந்து அணி வீரர்களுக்கு போதிய அளவில் சர்வதேச டி20 கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி விமர்சகர்கள் விளாசி வருகிறார்கள்.