மும்பை : இந்திய டி20 அணியின் கேப்டனாக பும்ரா செயல்படப் போகிறாரா? என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளார் அவரது மனைவி சஞ்சனா கணேசன்.
2024 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. அடுத்து பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா? என்ற ஒரு சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. அயர்லாந்து போட்டியின் முடிவில் பேசிய ரோஹித் சர்மா அந்த காயம் பெரிதானது இல்லை என கூறி இருந்தார்.
ஆனாலும், அடுத்த கட்ட பயிற்சியின் போது அவருக்கு அந்த இடத்தில் வலி இருந்தால் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்படும் என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் தான் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தனது சமூக வலைதளக் கணக்கில் பும்ரா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், "பும்ரா டாஸ் போடுவதைப் பார்க்க என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை" என கூறப்பட்டிருந்தது. அதாவது பும்ரா டாஸ் போடுவதை பார்க்க விரும்புவதாக கூறியிருந்தார். ஒரு போட்டியில் தான் டாஸ் போடுவார்கள் ஒருவேளை கேப்டனுக்கு காயம் ஏற்பட்டாலோ அவர் அணியில் களமிறங்கவில்லை என்றாலோ அவருக்கு பதிலாக துணை கேப்டன் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார்.
ஆனால் அப்படி பார்த்தால் கூட ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டிய நிலை வரும். ஆனால், பம்ரா டாஸ் போடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என அவர் மனைவி கூறி இருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. ரோஹித் சர்மாவுக்கு காயம் பெரிதாக இருக்கிறதா? அவரால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாதா? என்பது முதல் சந்தேகம். அடுத்து பும்ரா டாஸ் போட போகிறார் என்றால் அது அவரது மனைவி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியை பற்றி தான் பேசுகிறாரா? அல்லது வேறு ஏதாவது விளம்பரத்திற்கான பதிவா? என்ற சந்தேகமும் உள்ளது