நியூயார்க் : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் செய்த செயல் ஒன்று அந்த நாட்டின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மீது பெரிய நம்பிக்கை இல்லை எனினும் தனது குரூப்பில் இடம் பெற்றுள்ள கத்துக்குட்டி அணிகளான அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளை பாகிஸ்தான் வீழ்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் தாங்கள் ஆடிய முதல் போட்டியில் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது பாகிஸ்தான் அணி. அந்தப் போட்டியில் அமெரிக்க அணி சேஸிங் செய்த போது மூத்த வேகப் பந்துவீச்சாளரான முகமது அமீர் போட்டியின் முக்கிய கட்டத்தில் ஆலோசனை ஒன்றை கூறினார். அதாவது 14 மற்றும் 15 வது ஓவரில் மொத்தம் 11 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தது பாகிஸ்தான் அணி.

அந்த இரண்டு ஓவர்களிலும் வேகப் பந்துவீச்சாளர்களே பந்து வீசி இருந்தனர். அதிலும் 15வது ஓவரை முகமது அமீர் வீசி இருந்தார். அந்த இரண்டு ஓவர்களால் அமெரிக்க அணி கடும் அழுத்தத்தில் இருந்தது. அப்போது கேப்டன் பாபர் அசாம்-இடம் தொடர்ந்து வேகப் பந்துவீச்சை பயன்படுத்துமாறு ஆலோசனை கூறினார் முகமது ஆமீர். ஆனால், அவர் பேச்சை கேட்காத பாபர் அசாம் சதாப் கான் என்ற சுழற் பந்துவீச்சாளரை பந்து வீச அழைத்தார்.
அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஷதாப் கான் வீசிய 16 வது ஓவரில் அமெரிக்க அணி 11 ரன்கள் சேர்த்தது. இதை அடுத்து அமெரிக்க அணிக்கு அழுத்தம் சற்று குறைந்தது. அதன் பின்னரே அந்த அணி போட்டியை டை செய்து, சூப்பர் ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றது பின்னர் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அனுபவ வீரர் சொல்லியும் வேகப் பந்துவீச்சாளரை பந்து வீச வைக்காதது அந்த நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.