ஆன்டிகுவா : டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஐபிஎல் தொடரே காரணம் என்று ஆஸ்திரேலியா அணியின் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகளில் விளையாடி 4லும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக சூப்பர் 8 சுற்றில் இந்தியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணிகளுடன் ஆஸ்திரேலியா அணி விளையாடவுள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு அனுபவ வீரரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அமைந்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மட்டும் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டாய்னிஸ் 156 ரன்களும், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா அணியின் முழு நேர ஆல்ரவுண்டராகவே ஸ்டாய்னிஸ் மாறியிருக்கிறார். அதேபோல் 3வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
இதுகுறித்து மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் பேசுகையில், எனது திட்டம் சாதாரணமானது. சூழலுக்கு ஏற்ப கூடுதல் பலத்துடன் சரியான ஷாட்ஸை விளையாட வேண்டும் என்று நினைத்திருந்தேன். கூடுதல் காற்று அடித்ததால், காற்றடிக்கும் திசையில் பந்தை அடிப்பது எளிதாக இருந்தது. நானும் ட்ராவிஸ் ஹெட்டும் சில பவுலர்களை குறி வைத்து அட்டாக் செய்தோம். தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசியது ஆட்டத்தை மாற்றியதாக நினைக்கிறேன்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருகிறேன். அதேபோல் 3 முதல் மாதங்களாக ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடியது எனது ஃபார்முக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் என்னால் எளிதாக ரன்களை குவிக்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் சென்ட்ரல் ஒப்பந்தத்தை வேண்டாம் என்று கூறிய ஸ்டாய்ன்ஸ், இளம் வீரர்களுக்காக விட்டுக் கொடுத்தார்.
தற்போது ஆஸ்திரேலியா அணிக்காக டி20 உலகக்கோப்பையில் முன் நின்று அசத்தி வருவது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏற்கனவே 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.