சென்னை : டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை கத்துக்குட்டியான அயர்லாந்து அணி வீழ்த்தும் என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கணித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஃபீவர் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளதால், ஐசிசி குரூப் சுற்று மூலமாக லீக் போட்டிகளை நடத்துகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டாலும், அயர்லாந்து அணியை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை ஏற்கனவே வீழ்த்தியுள்ளது. ஐசிசி தொடரில் கத்துக்குட்டி அணிகள் எப்போது விஸ்வரூபம் எடுப்பார்கள் என்றே தெரியாது.
கடந்த உலகக்கோப்பை தொடரில் கூட நெதர்லாந்து அணியிடம் வலிமையான தென்னாப்பிரிக்கா வீழ்ந்தது. இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசுகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அடைந்த தோல்வியுடன் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கிறது. அந்த அணியின் ஃபீல்டிங் சொதப்பல், இன்கன்சிஸ்டன்சி பேட்டிங் ஆகியவை பிரச்சனையாக உருவாகக் கூடும்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணியை பலரும் குறைவாக மதிப்பிடுவார்கள். ஆனால் அயர்லாந்து அணி சாதாரண அணி அல்ல. ஏனென்றால் அந்த அணியின் தொடக்க வீரர்களான பால்பர்னி மற்றும் ஸ்டெர்லிங் இருவரும் தரமான பேட்ஸ்மேன்கள். உலகம் முழுவதும் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். அதேபோல் அவர்களின் கிரிக்கெட் ஒழுக்கத்தை நேரில் கண்டிருக்கிறேன். அதேபோல் லாட் டக்கரும் சிறந்த பேட்ஸ்மேன்.
அதேபோல் பவுலிங்கில் ஜோஷ் லிட்டில் ஐபிஎல் தொடரிலேயே அசத்தி வருகிறார். குர்டிஸ் காம்ஃபர், மார்க் அடைர் ஆகியோரும் சிறந்த பவுலர்கள். அதேபோல் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி தான் தொடர்ச்சியாக கத்துக்குட்டி அணிகளிடம் அடி வாங்கி வருகிறது. அண்மையில் ஆஃப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது. அவர்களின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருக்கும். அதனால் அயர்லாந்து அணியால் பாகிஸ்தான் அணியை வீழ்த்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.