மும்பை: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2024 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியின் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சை தன் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என இர்பான் பதான் கூறியிருக்கிறார். எனது கடைசி மூச்சு இருக்கும்போது கூட அதை நினைத்துப் பார்ப்பேன் என்று உணர்ச்சி பெருக்கில் உடைந்த நிலையில் பேசினார். அந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. அடுத்த பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது கடைசி ஓவரின் முதல் பந்தை அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் தூக்கி அடித்தார். அது பவுண்டரி கோட்டை தாண்டி செல்ல இருந்தது. ஆனால் அதற்கு முன் சூர்ய குமார் யாதவ் ஓடி வந்து கேட்ச் பிடித்தார்.

அவர் ஓடி வந்த வேகத்தில் பவுண்டரி எல்லையை தாண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் பந்தை மீண்டும் மேலே தூக்கி போட்டு விட்டு, வெளியே சென்றார். பின் மீண்டும் பவுண்டரி எல்லைக்குள் வந்து பந்தை கேட்ச் பிடித்தார். இதை அடுத்து டேவிட் மில்லர் ஆட்டம் இழந்தார். ஒருவேளை அந்த கேட்சை சூர்யகுமார் தவற விட்டிருந்தால் அது சிக்ஸ் ஆக மாறி இருக்கும். ஆட்டத்தின் முடிவே தென்னாப்பிரிக்கா வசம் சென்று இருக்கும்.
இந்த நிலையில் போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த இர்பான் பதான் போட்டி முடிந்தவுடன் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். பின்னர் அவர் பேசுகையில், "பும்ராவுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ரோஹித் சர்மாவுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஹர்திக் பாண்டியாவுக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச்சை என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன்" என உடைந்த குரலில் பேசினார்.
"எனது கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் போது கூட, சூர்யகுமார் யாதவ், டேவிட் மில்லரின் கேட்ச்சை பிடித்ததை நான் நினைத்துப் பார்ப்பேன். டேவிட் மில்லர் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன். 20வது ஓவரின் முதல் பந்திலேயே அது சிக்ஸ் ஆக மாறி இருக்கும். அது நடந்திருந்தால் போட்டி இந்திய அணி கையை விட்டு போயிருக்கும்" என்றார்.
மேலும், "நான் கடந்த 10 நாட்களாக மோசமான மன நிலையில் இருக்கிறேன். ஆனால், அந்த மன அழுத்தத்தால் நான் இப்போது கண்ணீர் சிந்தவில்லை. இப்போது இந்திய அணி வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி" என இந்திய அணிக்கு நன்றி கூறினார் இர்பான் பதான். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இர்பான் பதானின் மேக்கப் நிபுணர் வெஸ்ட் இண்டீஸ்-இல் நீச்சல் குளத்தில் மூழ்கி மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.