மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இன்று நேர்முகத் தேர்வு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது/ அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கவுதம் கம்பீர் மட்டுமே விண்ணப்பம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
உண்மையில் 3000-க்கும் அதிகமான ஆன்லைன் விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்றது. அதில் போலி விண்ணப்பங்களை தவிர்த்து தகுதி உள்ள இந்திய அளவிலும், வெளிநாடுகளில் இருந்தும் பயிற்சியாளர்கள் சிலர் விண்ணப்பித்து இருக்கக்கூடும். ஆனால், ஒரு பெயருக்கு கூட அவர்களில் ஒருவரைக் கூட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை.

பிசிசிஐ பெற்ற 3000க்கும் அதிகமான விண்ணப்பங்களில் 99 சதவீதம் வேடிக்கைக்காக ரசிகர்கள் அனுப்பிய போலி விண்ணப்பங்கள் என பிசிசிஐ அதிகாரிகள் விளக்கம் அளித்து இருந்தனர். உதாரணத்திற்கு நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரின் பெயர்களில் கூட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அந்த போலி விண்ணப்பங்களை நீக்கிவிட்டு பார்த்தால் நிச்சயமாக இந்திய அளவில் சில பயிற்சியாளர்கள் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருப்பார்கள்.
ஆனால், பிசிசிஐ ஒட்டுமொத்த விண்ணப்பங்களையும் தூக்கி எறிந்து இருக்கிறது. ஏற்கனவே, கவுதம் கம்பீரை தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்க போகிறோம் என்பதை பிசிசிஐ முன்கூட்டியே முடிவு செய்துவிட்டது. அவரிடம் தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு விட்டது. கவுதம் கம்பீர் நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வந்தார். இந்த நிலையில் இன்று நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது.
கவுதம் கம்பீரை தான் தேர்வு செய்யப் போகிறோம் என்றால் எதற்காக ஜனநாயக முறைப்படி விண்ணப்பங்களை பெற வேண்டும்? தலைமை பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பை பொது தளத்தில் வெளியிட வேண்டும்? என்ற கேள்வியை கிரிக்கெட் ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர். ஜனநாயக முறைப்படி தலைமை பயிற்சியாளர் தேர்வு நடப்பதாக வெளி உலகத்திற்கு காட்டிக் கொள்ள வேண்டியே இந்த கண் துடைப்பு நாடகம் நடப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு வரை பிசிசியில் இது போன்ற ஜனநாயக நடைமுறைகள் எதுவுமே கடைபிடிக்கப்படவில்லை. பிசிசிஐ பதவிகள் முதல் மாநில கிரிக்கெட் அமைப்பு பதவிகள் வரை அனைத்துமே அங்கிருக்கும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு இடையே பேசி வைத்து பிரித்துக் கொள்ளப்படும். அதன் பின் உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ நிர்வாகம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு உச்ச நீதிமன்றம் காட்டிய வழிகாட்டுதலின்படி பிசிசிஐ-யின் கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன.
அப்போது இருந்து இந்த ஜனநாயக முறைப்படியான தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் நடைமுறை உள்ளது. ஆனால் இது வெறும் நாடகத்தனமாகவே உள்ளது. முன்கூட்டியே அனைத்து பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்து விட்டு, அவர்களிடம் திரை மறைவில் பேசிவிட்டு பின்னர் விண்ணப்பங்கள் பெறுவதாகவும், நேர்முகத் தேர்வு நடத்துவதாகவும் நாடகம் நடத்தப்படுகிறது.
கவுதம் கம்பீர் ஒரு சிறந்த பயிற்சியாளராக இருப்பார் என்ற நம்பிக்கை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உள்ளது. அதை ஏன் இப்படி நாடகத்தனமாக நடத்த வேண்டும்? உண்மையாகவே இந்த பதவிக்கு விண்ணப்பித்திருக்கும் மாநில அளவிலான, உள்ளூர் அளவிலான பயிற்சியாளர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர்களையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும். அவர்களில் தகுதியான நபர்களை குறைந்தபட்சம் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் இந்த ஜனநாயக முறைப்படியான தேர்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.