மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை தங்களுடைய முதல் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் இந்திய அணி பலம் குன்றிய ஆப்கானிஸ்தான் அணி, பார்படாஸ் நகரில் எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலும், சில மாற்றம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களும் இந்திய அணியின் ஸ்டார் ஆல் ரவுண்டருமான ஜடேஜா நடப்பு தொடரில் சொதப்பி வருகிறார்.

இதனால் ஜடேஜா இடம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதன் காரணமாக குல்தீப் யாதவை களம் இறக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. முஹம்மது சிராஜுக்கு பதிலாக குல்திப் யாதவை சேர்க்கலாம் என்ற ஒரு யோசனையும் இருக்கிறது.
இந்த சூழலில் அக்சர் பட்டேல், ஜடேஜா, குல்திப் ஆகியோரை சேர்க்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முகமது சிராஜ் போன்ற வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு முக்கியம் என்பதால் பார்மில் இல்லாத ஜடேஜாவை நீக்கிவிடலாம் என்று ஒரு யோசனையும் கூறப்படுகிறது.
காரணம் நடப்பு டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இந்த மூன்று போட்டியிலும் இடம்பெற்றுள்ள ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டில் ஜீரோ, பேட்டிங்கில் ஜீரோ ரன்கள், பில்டிங்கில் கேட்ச்சில் ஜீரோ, ரன் அவுட் ஜீரோ என அனைத்துமே ஜீரோவாக ஜடேஜா இருக்கின்றார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே வின் ஹீரோவாக ஜடேஜா தான் இருந்தார். ஆனால் தற்போது பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஜடேஜா தடுமாறி வருவது இந்திய அணிக்கு பின்னடவை ஏற்படுத்தி இருக்கிறது. ஜடேஜாவுக்கு ஆதரவாக இந்திய அணி நிர்வாகம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினாலும் அவருடைய இடம் பறிபோகும் சூழல் ஏற்பட்டிருப்பதாக தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.