மும்பை: பும்ரா இல்லையென்றால் இந்திய அணியால் 2024 டி20 உலகக் கோப்பை வென்றிருக்க முடியுமா? என்பது மிகப் பெரிய கேள்வி. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு சிறிய அணிகளை எளிதாக வீழ்த்தி விட்டது. ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது பும்ரா வீசிய 15வது ஓவர் அந்தப் போட்டியை தலைகீழாக மாற்றியது. அந்த ஓவரின் முதல் பந்தில் முகமது ரிஸ்வான் பும்ரா வீசிய வந்தை பெரிய ஷாட் அடிக்க முயன்றார். ஆனால், பந்து அவர் நினைத்ததற்கு மாறாக அவரது பேட்டுக்கும் காலுக்கும் இடையே புகுந்து சென்று ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ஆனால், அந்த பந்து வீசப்பட்டபோது அது ஆஃப் ஸ்டம்ப்பை நோக்கி வருவது போலத்தான் இருந்தது. ஆனால், பிட்ச் ஆனவுடன் லெக் ஸ்டம்ப்பை நோக்கி சென்றது.

பும்ரா பலமுறை இந்த மேஜிக்கை செய்து இருக்கிறார். இதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்த மேஜிக்கை நிகழ்த்திக் காட்டினார். இதுதான் பும்ராவை இன்று உலகின் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக மாற்றி உள்ளது. 2018 காலகட்டத்தில் பும்ரா இந்திய அணிக்காக விளையாடிய போது அவரது மிகச்சிறந்த பந்தாக இருந்தது யார்க்கர் மட்டுமே. அப்போது அவரை யார்க்கர் மன்னன் என்று அனைவரும் அழைத்தனர். அவர் எந்த சூழ்நிலையிலும் யார்க்கர் வீசும் திறன் பெற்றிருந்தார். முதல் இரண்டு ஆண்டுகளில் அதை வைத்து அவர் பல விக்கெட்களை வீழ்த்தினார். அவரது யார்க்கர் பந்துகளில் ரன் குவிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர்.
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவால் நீண்ட காலம் அதை மட்டும் வைத்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முடியவில்லை. அதை உணர்ந்த வேறு விதமான டெக்னிக்குகளை பயன்படுத்தத் தொடங்கினார். அவர் பந்து வீசும் முறை தனித்துவமாக இருப்பதால் அவரது பந்துகள் எப்போதுமே லேசாக வளைந்து தான் செல்லும். அவரது பந்து வீசும் பாதையை எடுத்து பார்த்தால் பந்து அவரது கைகளில் இருந்து விடுபடும் இடத்தில் இருந்து பிட்ச்சாகும் இடம் வரை வளைந்து தான் செல்லும்.
அத்துடன் அவர் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை வீச ஆரம்பித்தார். போட்டியின் துவக்கத்தில் பந்து புதிதாக இருக்கும் போது இன்ஸ்விங், அவுட் ஸ்விங்குகளை வீசுகிறார். அடுத்து பந்து பழையதான உடன் ரிவர்ஸ் ஸ்விங்குகளை வீசுகிறார். அவரது பந்து வீசும் முறை, பந்து வரும் பாதை, அதன்பின் பந்து ஸ்விங் ஆவது என பல்வேறு டெக்னிக்குகள் இதில் இருப்பதால் பேட்ஸ்மேன்களால் அவரது பந்துகளை எளிதாக அணுக முடியவில்லை. அதனால் ஒவ்வொரு பேட்ஸ்மெனும் பும்ராவின் பந்துகள் பிட்ச் ஆகும் வரை காத்திருந்து, அதன் பின்னரே என்ன ஷாட் ஆடுவது என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அதனாலேயே அவரது பந்துகளில் அதிக பவுண்டரி அடிக்க முடியாமல் போகிறது. சில பேட்ஸ்மேன்கள் அவரது பந்தில் ஒன்று, இரண்டு பவுண்டரிகளை அடித்து விட்டால் தொடர்ந்து அதே போல ஆடலாம் என நினைத்து அவரது ஸ்விங் பந்துகளையும் அடிப்பார்கள். அப்படி நினைத்தால் அடுத்த சில பந்துகளில் அவர்கள் பவுல்ட் அவுட் ஆவார்கள் அல்லது எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடமோ அல்லது ஸ்லிப் ஃபீல்டரிடமோ கேட்ச் கொடுத்து ஆட்டம் இழப்பார்கள். பேட்ஸ்மேனின் பேட்டுக்கும், காலுக்கும் நடுவே பந்தை ஸ்விங் செய்வதில் பும்ரா தேர்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார்.
இது குறித்து 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பும்ரா பேசியிருந்தார். தான் முதன் முதலில் பந்து வீசத் தொடங்கும் போது யார்க்கர் பந்துகளை மட்டுமே வீசக் கற்றுக் கொண்டதாகவும், ஆனால் தான் ஒரே ஒரு வித்தை மட்டுமே அறிந்த ஒரு பந்துவீச்சாளராக இருக்கக் கூடாது என்பதால் பல்வேறு டெக்னிக்குகளையும் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பும்ரா 8 போட்டிகளில் 29.4 ஓவர்கள் பந்து வீசி 15 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 4.17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். சூப்பர் 8 சுற்று வரை முன்னேறிய எந்த அணியின் பந்துவீச்சாளரும் பும்ராவின் சராசரிக்கு அருகே கூட வரவில்லை. பும்ராவைத் தவிர ஒருவர் கூட ஓவருக்கு 5 ரன்களுக்கு கீழ் விட்டுக் கொடுக்கவில்லை.