மும்பை: டி20 உலகக்கோப்பையை 2வது முறையாக வென்று இந்திய அணி தாயகம் திரும்பியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதன்பின் பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக இந்திய அணி வருவதற்கு தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்தியா வந்த வீரர்கள் காலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இதன்பின் மும்பையில் நடந்த வெற்றிப் பேரணியில் இந்திய வீரர்கள் திறந்த வெளி பேருந்தில் வலம் வந்தனர். இந்திய அணி வீரர்களை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் மெரைன் ட்ரைவ் பகுதியில் கூட, இந்திய வீரர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் விராட் கோலி பேசுகையில், ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நானும், ரோகித் சர்மாவும் நீண்ட நாட்களாக முயற்சித்து வந்தோம். அதில் உலகக்கோப்பையை வென்றிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தோம்.
வான்கடே மைதானத்தில் டி20 உலகக்கோப்பையை கொண்டு வந்தது ஸ்பெஷலான உணர்வை கொடுக்கிறது. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் ஓய்வறை நோக்கி நடந்து சென்ற போது, என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. அதேபோல் ரோகித் சர்மாவும் கண்ணீருடன் வந்து கட்டிப்பிடித்தார். அந்த நிமிடத்தை என்னால் கொஞ்சம் கூட மறக்க முடியாது.
15 ஆண்டுகளில் ரோகித் சர்மாவை எமோஷனலாக பார்த்ததே இல்லை. அதுதான் அவர் முதல்முதலாக எமோஷனலாக இருந்த தருணம். அந்த நாளினை மறக்க முடியாது. அதேபோல் பும்ரா ஒரு தலைமுறைக்கான பவுலர். இவர் இந்திய அணிக்காக விளையாடுவது எங்களின் அதிர்ஷ்டம். ஒருவரை நான் பாராட்ட விரும்புகிறேன். எப்போதெல்லாம் இந்திய அணி பின் தங்கியதோ, அப்போதெல்லாம் கம்பேக் கொடுக்க காரணமாக இருந்தார்.
ஒரு போட்டியிலோ, 2 போட்டியிலோ அல்ல.. ஒவ்வொரு போட்டியிலும் பும்ரா செய்து காட்டினார். அவருக்காக மிகப்பெரிய கரகோஷத்தை எழுப்ப கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். அப்போது நெறியாளர் கவுரவ் கபூர், பும்ராவை இந்திய நாட்டின் பொக்கிஷமாக அறிவிக்கக் கோரி மனு ஒன்றை எழுத யோசித்து வருகிறேன். நீங்கள் கையெழுத்து போடுவீர்களா என்ற கேட்க, உடனடியாக கையெழுத்து போடுகிறேன் என்று தெரிவித்தார்.