நியூயார்க் : 2024 டி20 உலக கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி. இந்த போட்டி நடைபெற்ற பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தன.
குறிப்பாக டி20 போட்டிக்கு ஏற்ற பிட்ச் இல்லை எனவும், பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை எனவும் பலரும் கூறி இருந்தனர். ஆனால், இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, அதற்கு நேர் மாறாக தான் பிட்ச் குறித்து எந்த புகாரும் தெரிவிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார். அதன் மூலம் இந்திய அணியின் உலகக்கோப்பை திட்டம் என்ன என்பதும் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் குரூப் சுற்றின் முதல் மூன்று போட்டிகளை நியூயார்க் மைதானத்தில் தான் விளையாட உள்ளது. அதில் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. இதே மைதானத்தில் தான் அடுத்த இரண்டு போட்டிகளையும் இந்திய அணி விளையாட உள்ளது. இங்குள்ள பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு முழுமையாக ஒத்துழைக்கிறது. மேலும், டெஸ்ட் போட்டி போல பந்து வீசும் பட்சத்தில் விக்கெட் வேட்டையாட முடியும் என்பதை அயர்லாந்து போட்டியில் இந்திய அணி உறுதி செய்து இருக்கிறது.
எனவே, பேட்டிங் செய்ய சாதகமாக இல்லாமல் இருந்தாலும் இந்திய அணி மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களுடன், பகுதிநேர வேகப் பந்துவீச்சாளர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபேவை ஆட வைத்து வெற்றி பெறலாம் என திட்டமிட்டுள்ளது. அதைத்தான் பும்ரா சூசகமாக சுட்டி காட்டி இருக்கிறார்.
இந்த போட்டியில் அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 3 ஓவர்களில் வெறும் ஆறு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். ஒரு மெய்டன் ஓவரும் வீசி இருந்தார். இதை அடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அப்போது பேசிய பும்ரா, "இந்தியாவில் இருந்து வரும் எனக்கு இங்கு பந்து ஸ்விங் ஆவதும், பவுன்ஸ் ஆவதும், பிட்ச்சான பின் வேகமாக செல்வதும் நன்றாக உள்ளது. நான் பிட்ச் குறித்து எந்த புகாரும் சொல்ல மாட்டேன். இங்கு நாம் விரைவாக செயல்பட வேண்டும். பிட்ச் குறித்து முன்பே எந்த திட்டமும் இல்லாமல் வர வேண்டும். இங்குள்ள விக்கெட் எப்படி செயல்படுகிறதோ அதற்கு ஏற்ப நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்." என்று கூறினார்.