மும்பை : இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக இடம் பெற்று கடந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார் ஜிதேஷ் சர்மா.
அதை அடுத்து 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ஜிதேஷ் சர்மாவே களமிறங்குவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அந்த இடத்தை பிடிக்க முடிவு செய்து இருக்கிறார் கே எல் ராகுல்.

கே எல் ராகுல் டி20 அணிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என முடிவு செய்து கடந்த ஓராண்டில் அவருக்கு எந்த டி20 போட்டி வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி, தொடர்ந்து டி20 அணியில் இடம் பெற திட்டமிட்டு இருக்கிறார். அதனால், ஜிதேஷ் சர்மாவின் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அவர் மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே செயல்பட முடியும் நிலை ஏற்படும்.
இந்திய டி20 அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். தனது அதிரடி பேட்டிங்கால் அணிக்கு ரன்களை பெற்றுத் தந்து இருந்தார்.
அதிரடி மன்னன் ரிங்கு சிங் ஐந்தாம் வரிசையிலும், அவருக்கு இணையாக அதிரடி ஆட்டம் ஆடக் கூடிய ஜிதேஷ் சர்மா ஆறாம் வரிசையிலும் பேட்டிங் இறங்கினால் எதிரணிக்கு பெரிய அழுத்தம் ஏற்படும். அதை மனதில் வைத்தே இஷான் கிஷனை ஓரங்கட்டி விட்டு ஜிதேஷ் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது கே எல் ராகுல் இந்திய டி20 அணிக்கு திரும்ப காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடரில் அவர் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில், அதிக ரன்களை குவித்தால் அவரை இந்திய அணியில் தேர்வு செய்தே ஆக வேண்டிய நிலை ஏற்படும். அப்போது ஜிதேஷ் சர்மா மாற்று வீரராக "வாட்டர் பாய்" வேலை பார்க்க நேரிடும்.