மும்பை : இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸ் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அந்த ரேஸில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே கவுதம் கம்பீர் பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அரசியலில் இருந்து விலகிய கவுதம் கம்பீர், கேகேஆர் அணியின் ஆலோசகராக பணியாற்றி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
அதேபோல் லக்னோ அணியின் பயிற்சியாளராக 2 ஆண்டுகள் பணியாற்றி அந்த அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றுள்ளார். இதனால் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தால், இந்திய அணியால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியும் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் குழுவை கவுதம் கம்பீர் தேர்வு செய்து வருகிறார்.
அதில் ஃபீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸ் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் பணியாற்றிய போது, அதே லக்னோ அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர் ஜாண்டி ரோட்ஸ். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை, பஞ்சாப், லக்னோ உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கும் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். இதனால் கவுதம் கம்பீர் குழுவில் ஜாண்டி ரோட்ஸ் இடம்பெறுவதற்காக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.