மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே பங்கேற்ற கே எல் ராகுல் அதன் பின் காயம் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் லண்டனில் மருத்துவரை சந்தித்து தனது காயத்தின் நிலை குறித்து ஆலோசிக்க சென்று இருந்தார்.
ஒருவேளை அவருக்கு முழு உடற்தகுதி இருக்கிறது என தெரிந்தால் அவர் நேரடியாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கும் நிலையில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடருக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நான்கு நாட்களாக லண்டனில் இருந்த கே எல் ராகுல் அவசர அவசரமாக இந்தியா வந்திறங்கி இருக்கிறார். விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சான்று பெறப் போகிறார் எனவும், அதைத் தொடர்ந்து தனது ஐபிஎல் அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-இன் பயிற்சி முகாமில் அவர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கே எல் ராகுல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதன் பின்னணியில் பெரிய திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. கே எல் ராகுல் இந்திய டெஸ்ட் அணியிலும், ஒருநாள் அணியிலும் மட்டுமே தவிர்க்க முடியாத வீரராக இடம் பெற்று வருகிறார். ஆனால், டி20 அணியில் அவருக்கான இடம் இல்லை. 2024 டி20 உலகக்கோப்பை தொடர், ஐபிஎல் முடிந்த உடன் நடைபெற உள்ளது. அதில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என காய் நகர்த்தி வருகிறார் கே எல் ராகுல்.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாட சுப்மன் கில், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா என பலர் காத்துக் கொண்டு உள்ளனர். யாராவது ஒருவர் சிறிய காயத்தால் ஆட முடியாமல் போனாலும் அடுத்தவர் அந்த இடத்தை பிடிக்க போட்டி போடும் நிலையே உள்ளது.
இந்த நிலையில் டி20 அணியில் தனக்கான இடத்தை பெற "விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்" என்ற ஆயுதத்தை மறுபடியும் எடுக்க முடிவு செய்துள்ளார் கே எல் ராகுல். அதை வைத்தே கடந்த ஆண்டு 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார் ராகுல். தற்போது டி20 அணியில் ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார். மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவர் இந்திய அணி நிர்வாகத்தின் அதிருப்திப் பட்டியலில் இருக்கிறார்.
எனவே, விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற அடையாளத்துடன் டி20 அணியில் இடம் பெற்றால் அனுபவ வீரர் என்ற அடிப்படையில், ஜிதேஷ் சர்மாவை முந்தி போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பையும் கே எல் ராகுல் பெற முடியும். அதற்கு முதற்கட்டமாக 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அவர் செயல்பட உள்ளதாகவும், அதற்கு இப்போதிருந்தே பயிற்சி செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.