மியாமி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் டி20 போட்டிகளுக்கு லாயக்கு இல்லை என முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிரடியாக கூறி இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குருப் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா அயர்லாந்து மற்றும் கனடா ஆகிய ஐந்து அணிகளும் இடம்பெற்று இருந்த குரூப் ஏ வில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.

இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதை அடுத்து பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதிலும் கேப்டன் ப்பர் அசாம் குறித்து பலரும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாபர் அசாம் குறித்து பேசுகையில், "பாபர் அசாம் இனி டி20 கிரிக்கெட் விளையாடவே கூடாது என நான் நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எப்போதும் "டொக், டொக்" என ஆடிக் கொண்டே இருக்க முடியாது. பாபர் அசாம், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போல 4000 ரன்கள் குவித்துள்ளார் என்று கூறுகிறார்கள். ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் 112 முதல் 115 என்பதாகவே உள்ளது. என்ன சொல்கிறீர்கள்? இதை வைத்துக்கொண்டு எப்படி அவர் டி20 கிரிக்கெட் விளையாட முடியும்?" என ஸ்ரீகாந்த் விளாசி இருக்கிறார்.
பாபர் அசாம் மேலும் சில குற்றச்சாட்டுகளும் உள்ளன. அவர் பாகிஸ்தான் அணியில் தன் நண்பர்களை தேர்வு செய்ய வைக்கிறார் எனவும், அவர்கள் சரியாக விளையாடாத போதும் அவர்களுக்கு அணியில் இடம் அளிக்கிறார் என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கூறி வருகின்றனர். எனவே, பாபர் அசாமின் கேப்டன் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.