மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை வெற்றி ரோஹித் சர்மாவுக்கு தான் சொந்தம் என வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்றிருந்த சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார். இந்த வெற்றிக்காக ரோஹித் சர்மா என்னென்ன செய்தார்? என பட்டியலிட்டு, அதற்காக இந்த உலகக் கோப்பை ரோஹித் சர்மாவுக்கானது என கூறியிருக்கிறார்.
2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி, அதன் பின் 17 ஆண்டுகள் கழித்து 2024 இல் மீண்டும் டி20 உலகக் கோப்பையை வென்று இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம், இதுவரை டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டன்களிலேயே வயதானவர் என்ற பெருமையும் சேர்த்து பெற்றார் 37 வயதான ரோஹித் சர்மா.

இதற்கு முன் அவர் கேப்டன் ஆனதிலிருந்து இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆகியவற்றில் தோல்வி அடைந்து இருந்தது. ஒரே ஆண்டில் இரண்டு உலகக் கோப்பைகளில் இரண்டு முறை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்தாலும், மனம் தளராமல் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை சரியாக வழி நடத்தி வெற்றி பெற வைத்தார் ரோஹித் சர்மா.
அது குறித்து ஒரு பேட்டியில் பேசிய குல்தீப் யாதவ், "இந்த உலகக் கோப்பை ரோஹித் சர்மாவுக்கானது. அவர் இந்த உலகக் கோப்பை வெற்றிக்காக திட்டமிட்ட விதம், அவர் அணியை நேசித்த விதம் ஆகியவற்றுக்காகவே இந்த உலகக் கோப்பை அவருக்குத்தான் சொந்தம். மேலும், அவரது நோக்கம் மற்றும் அணுகுமுறை, அணி சந்திப்புகளில் அவர் எங்களை ஊக்கப்படுத்தியது, தொடரில் தனது திட்டங்களை செயல்படுத்தியது, பேட்டிங்கில் முன்னே நின்று அணியை வழிநடத்தியது ஆகியவற்றுக்காக இந்த உலகக் கோப்பையை அவருக்குத்தான் அளிக்க வேண்டும்" என்றார் குல்தீப் யாதவ்.
இந்த உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரையும் பாராட்டினார் குல்தீப் யாதவ். "இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விராட் கோலி 70-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இதைவிட சிறந்த உணர்வு வேறு எதுவும் இருக்க முடியாது. அவர் தனது டி20 கிரிக்கெட் வாழ்வை குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார் என்று நம்புகிறேன். ரோஹித் சர்மாவும் அதேபோலத்தான். ஜடேஜாவும் அதே போலத்தான். ஜடேஜா இத்தனை ஆண்டுகளில் அற்புதமான கிரிக்கெட்டை ஆடி இருக்கிறார்" என்றார் குல்தீப் யாதவ்.