நியூயார்க் : நியூயார்க் மைதான போட்டிகள் வியாபார ரீதியாக ஒத்துவராது என்று தென்னாப்பிரிக்கா வீரர் கிளாசன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் ரசிகர்களுக்கு அதிக சுவாரஸ்யங்களை அளித்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் எந்த அணி வெற்றிபெறும் என்று கணிக்க முடியாத அளவிற்கு அமைந்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 20 அணிகள் பங்கேற்றுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில், கத்துக்குட்டி அணிகளின் எழுச்சி புதிய ரசிகர்களை கொண்டு வந்துள்ளது.

நியூயார்க் மைதானத்தில் நடக்கும் ஒவ்வொரு லீக் போட்டிக்கும் 34 ஆயிரம் ரசிகர்கள் கூடி வருகின்றனர். வங்கதேசம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூயார்க் உள்ளிட்ட அணிகளுக்கு ரசிகர்களின் ஆதரவாக எதிர்பார்த்ததை விடவும் அதிகளவு உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் புதிய வணிகத்தை ஐசிசி உருவாக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதற்காக தான் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடத்த ஐசிசி திட்டமிட்டது. கிட்டத்தட்ட ஐசிசியின் நோக்கம் நிறைவேறி இருந்தாலும், லோ-ஸ்கோரிங் த்ரில்லர் போட்டிகள் சில பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் நியூயார்க் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் கூட எந்த அணியும் 140 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை.
இதுகுறித்து தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் கிளாசன் பேசுகையில், தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுபோன்ற லோ-ஸ்கோரிங் ஆட்டங்கள் மிகவும் பிடிக்கும். இந்த மாதிரியான பிட்ச்கள் அணிகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கிறது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் கிரிக்கெட் அடிப்படைகளை சரியாக செய்தாலே, இதுபோன்ற பிட்சில் எளிதாக வெற்றியை பெற முடியும்.
இதனால் எந்த அணியாலும் யாரை வேண்டுமானாலும் வெல்ல முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் வியாபார ரீதியாக பார்த்தோம் என்றால், இந்த மாதிரியான ஆட்டங்கள் ரசிகர்கள் மனதில் எந்த அளவிற்கு எடுபடும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். டி20 கிரிக்கெட் லீக்களின் எழுச்சியின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கிரிக்கெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஹை-ஸ்கோரிங் ஆட்டங்களின் தேவை அதிகமிருப்பதாக பார்க்கப்படுகிறது.