கொழும்பு : இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக பணிபுரிந்து வந்த முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். ஆசிய கிரிக்கெட்டில் இந்தியா ஆப்கானிஸ்தானைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் கடுமையாக தடுமாறி வருகிறது.
பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் அந்த அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் நமது பங்காளியான இலங்கை கிரிக்கெட் அணியும் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

இதன் காரணமாக அந்த அணி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அண்மையில் கிரிக்கெட் வாரிய நடவடிக்கையில் இலங்கை அரசு தலையிடுவதாக கூறி ஐசிசி அண்மையில் நடவடிக்கையும் எடுத்தது. இந்த நிலையில் இலங்கை அணி தொடர்ந்து டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலிருந்து வெளியேறி வருவது, அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை பட்டத்தை மட்டும் தான் இலங்கை அணி வென்றது. அதன் பிறகு எந்த ஒரு தொடரிலும் இலங்கை அணி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில்
ஜெயவர்த்தனே கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியமர்ந்தார். ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்ட நிலையில் அவருக்கு இந்த பதவி கிடைத்தது.
இலங்கை அணியை சீரமைக்க வேண்டும் என பல்வேறு முயற்சியை ஜெயவர்த்தனே எடுத்தாலும், அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இலங்கை அணி தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2024 டி20 உலக கோப்பை என இரண்டு தொடர்களில் முதல் சுற்றிலே வெளியேறி இருக்கிறது.
இதனால் ஜெயவர்த்தனே மீதும் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால் தாம் எடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முழு ஒத்துழைப்பை கொடுப்பதில்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார். இதனால் ஆளை விட்டால் போதும் என்று ஜெயவர்த்தனே தற்போது தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.