மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஜாம்பவான்கள் ஆன விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு நேர் மாறாக இளம் வீரர்கள் அணியை காப்பாற்றி வருகின்றனர்.இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் டி20 உலக கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இம்முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல போராடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு பதிலாக அணியின் இளம் நட்சத்திர வீரர்கள் தான் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்திருக்கிறார்கள். இந்த தொடரில் இந்தியா 5 போட்டியில் வெற்றி பெற்றது என்றால் அதற்கு பும்ரா முக்கிய காரணமாக திகழ்கிறார்.
இதுவரை நடப்பு டி20 உலக கோப்பையில் பும்ரா 19 ஓவர்கள் வீசி மொத்தம் 65 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பும்ரா ஆட்ட நாயகன் விருதை வென்றிருக்கிறார். இதைப் போன்று அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்றார்.
இதே போன்று சூப்பர் 8 சுற்று பிரிவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சூரிய குமார் அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.இந்த சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹர்திக் பாண்டியா 27 பந்துகளின் அரைசதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.
எல்லாம் சரியாக நடந்தால் இந்தியாவுக்கு இன்னும் மூன்று போட்டிகள் பாக்கி இருக்கும். இந்த மூன்று போட்டிகளாவது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருதை வெல்வார்களா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக விராட் கோலி பைனலில் ஆட்டநாயகன் விருதை வென்றால் அதைவிட கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சி இல்லை.