மும்பை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விராட் கோலிக்கு நெருக்கமான நபரும், அவரது பால்ய கால பயிற்சியாளருமான ராஜ்குமார் சர்மா அதிரடியான கருத்தை கூறி இருக்கிறார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக ஒரு இந்தியர் தான் நியமிக்கப்பட வேண்டும். அந்த பதவிக்கு தோனி சரியான நபராக இருப்பார். அவர் அதிக போட்டிகளில் ஆடியதோடு, பெரிய தொடர்களை வென்று கொடுத்துள்ளார். எனவே அவரை பயிற்சியாளராக நியமிக்கலாம் என அதிரடியாக பேசி இருக்கிறார்.

தோனி இன்னும் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்ப்பதாக சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் ராஜ்குமார் சர்மா இந்த கருத்தை முன் வைத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியபோது, "முதலில் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு யார், யாரெல்லாம் விண்ணப்பிக்கிறார்கள் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் இந்த பதவிக்கு வருபவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து விட்டால் அவர் இந்த பதவிக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருப்பார். அவர் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, மிகப்பெரிய தொடர்களை வென்று கொடுத்துள்ளார்." என்றார்,
மேலும், "தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் இந்திய வீரர்கள் மத்தியில் அவருக்கு அதிக மரியாதை கிடைக்கும். அவர் இந்த விளையாட்டை நீண்ட காலமாக ஆடி வருகிறார். அணியை சரியாக திட்டமிட்டு, முறையாக கையாள்வார். இதைச் செய்ய தோனிதான் சரியான நபர். ஏனெனில், தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டபோது அணியில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ராகுல் டிராவிட், ஹர்பஜன் சிங், கவுதம் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்கள் இருந்தனர். அப்படி இருந்தும் தோனி அணியை சிறப்பாக வழிநடத்தினார்" என்றார் ராஜ்குமார் சர்மா.