மும்பை: 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது. இதன்பின் டி20 உலகக்கோப்பையுடன் இன்று காலை இந்திய அணி டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினர்.
இதன்பின் பிரதமர் நரேந்திர மோடியுடன் காலை உணவருந்திய இந்திய அணி வீரர்கள், பின்னர் மும்பைக்கு புறப்பட்டனர். மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய பின் மெரைன் ட்ரைவ் முதல் வான்கடே மைதானம் வரை திறந்தவெளி பேருந்தில் இந்திய அணியின் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மாலை 4 மணி முதலே இந்திய அணி ரசிகர்கள் நீல ஜெர்சியை அணிந்து மெரைன் ட்ரைவ் பகுதியில் கூட தொடங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் வருகை தொடங்கிய போது, ஒரு கட்டத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 கிமீ தூரத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்திய அணி வீரர்களை டி20 உலகக்கோப்பையுடன் சந்திக்க உற்சாகமாக காத்திருக்க தொடங்கினர்.
எந்த அளவிற்கு கூட்டம் கூடியது என்றால், இந்திய அணி வீரர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறந்தவெளி பேருந்து கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. நீண்ட நேரமாக காத்திருந்த பேருந்து நகர முடியாமல் இருந்த போது, காவல்துறையினர் வந்து ரசிகர்களை ஒழுங்குபடுத்தி பேருந்தை அனுப்பி வைத்தனர்.
ஆனால் இதே கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சென்ற காட்சிகளும் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த போதும், ஆம்புலன்ஸ் செல்ல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வழிவிட்டுள்ளனர். அவ்வளவு கூட்டத்திலும் ஆம்புலன்ஸிற்கு வழிவிட வேண்டும் என்று பண்பு வெளியிட்டிருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதேபோல் இந்திய வீரர்களுக்கான ஸ்பெஷல் பேருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காட்சியையும், ஆம்புலன்ஸிற்கு ரசிகர்கள் வழிவிட்ட காட்சியையும் இணைத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் நீண்ட நாட்களுக்கு பின் மும்பை சாலையில் ரசிகர்கள் சூழ்ந்திருப்பது 1983 மற்றும் 2007 உலகக்கோப்பை வெற்றியை நினைவுப்படுத்தியுள்ளதாக பலரும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.