டெல்லி: டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இந்த வெற்றிக்கு யார் முக்கிய காரணம் என்பது தொடர்பாக சிராஜ் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். போட்டியை வென்ற பிறகு அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவர் மட்டுமின்றி கிட்டதட்ட அனைத்து வீரர்களும் எமோஷ்னலாகவே இருந்தனர்.
இந்தாண்டு டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்றது. இறுதிப் போட்டி நேற்றைய தினம் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

இறுதிப் போட்டி: இந்திய அணி கடந்த 2013ல் சாம்பியன்ஸ் டிராஃபி வென்ற நிலையில், அதன் பிறகு எந்தவொரு ஐசிசி டிராஃபியையும் வெல்லவில்லை. பல முறை இறுதிப் போட்டி வரை முன்னேறினாலும் கூட கோப்பையை எட்டி பிடிக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவும் இதுவரை ஒரு முறை கூட உலகக் கோப்பையை வென்றதே இல்லை. இதனால் இரு தரப்பும் இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்புக் காட்டின.
இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறியது. இருப்பினும், கோலி மறுபுறம் மெல்ல நங்கூரம் போல ஆடி வந்தார். அக்சர், துபேவும் கொஞ்சம் அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்களை எடுத்தது.
வெற்றி: அடுத்துக் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட் இழந்து வந்தன. குறிப்பாக அதிரடியாக ஆடி வந்த கிளாசென் விக்கெட்டை ஹர்த்திக் எடுத்தார். அதன் பிறகு போட்டி நம் பக்கம் திரும்பியது. அடுத்து மில்லர் தூக்கி அடித்த பந்தை பவுன்சடரி எல்லைக்கு மிக அருகே நின்ற சூர்ய குமார் யாதவ் அட்டகாசமாகப் பிடித்தார். இந்த 2ம் தான் போட்டியை மொத்தமாக மாற்றியது. அடுத்து பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் கட்டுக்கோப்பாக வீச இந்தியா கோப்பையைத் தட்டி தூக்கியது.
சிராஜ்: இதற்கிடையே போட்டிக்குப் பிறகு பேசிய சிராஜ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். ஆட்டத்தை பும்ரா புரட்டிப் போட்டதாகவும் அவர் தான் ரியல் கேம் சேஞ்சர் என்றும் புகழ்ந்து பேசினார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இந்த இறுதிப் போட்டி ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்குச் சாதகமாக இருந்த நிலையில், எனது ஒரே நம்பிக்கை பும்ரா தான்.. அவர் தான் நமது டீமில் இருக்கும் ஒரே கேம் சேன்ஞர்.. நான் என்ன நினைத்தேனோ.. சரியாக அதுவே தான் நடந்து இருக்கிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை.. எனது ஃபீலிங்கை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
என்ன சொன்னார்: கடந்த உலகக் கோப்பையில் நாம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தோம்.. இந்த முறை கோப்பையை வென்றுவிட்டோம். உலகில் வாழும் அனைத்து கிரிக்கெட் வீரருக்கும் உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே ஆசையாக இருக்கும். அப்படிப்பட்ட உலகக் கோப்பையை நாங்கள் வென்றுவிட்டோம்.. அது மகிழ்ச்சியைத் தருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
100% சரி: சிராஜ் சொன்னது போலவே பும்ரா வீசிய 16 மற்றும் 18ஆவது ஓவர்களில் முக்கியமானதாக இருந்தது. 16ஆவது ஓவரில் பும்ரா வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேபோல 18ஆவது ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். அவரது இந்த 2 ஓவர்கள் ரொம்ப ரொம்ப முக்கியமானதாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை.
சிராஜ் பேசும் போது முழுக்க எமோஷ்னலாகவே காணப்பட்டார். அவரால் பேசும் போது அழுகையைக் கட்டுப்படுத்தே முடியவில்லை. சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஐசிசி டிராபியை வென்றுள்ள நிலையில், சிராஜ் மிகவும் எமோஷ்னலாகவே இருந்தார். சிராஜ் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அனைத்து இந்திய வீரர்களுமே எமோஷ்னலாகவே இருந்தனர். குறிப்பாக ரோஹித், கோலி, ஹர்திக் என அனைவரும் ஆனந்த கண்ணீரில் மூழ்கினர்..