நியூயார்க்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது குரூப் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடிய நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தை உடைத்து எரியும் பணிகள் துவங்கி உள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். அதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டை அமெரிக்கா முழுவதும் பிரபலமாக்க திட்டமிடப்பட்டது. அதற்காக வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற இருந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் சிலவற்றை அமெரிக்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதற்காக அமெரிக்காவில் ஏற்கனவே இருந்த டல்லாஸ் மற்றும் ஃப்ளோரிடா கிரிக்கெட் மைதானங்களுடன் மூன்றாவதாக அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் மற்றொரு கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டது. வெறும் 106 நாட்களில் இந்த கிரிக்கெட் மைதானம் உருவானது. இது தற்காலிக மைதானம் மட்டுமே.
இந்த மைதானத்தில் உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட இந்திய அணி தனது மூன்று குரூப் சுற்று போட்டிகளில் பங்கேற்றது. இதில் தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் நடைபெற்றது. எதிர்பார்த்தது போலவே அமெரிக்காவில் இந்திய அணி மற்றும் அமெரிக்க அணிகள் ஆடிய போட்டிகள் பரவலாக பேசப்பட்டது.
தற்போது நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் திட்டமிடப்பட்டு இருந்த அனைத்து போட்டிகளும் முடிந்துள்ளது. இந்த நிலையில் அந்த தற்காலிக மைதானம் அகற்றப்பட உள்ளது. இந்த மைதானம் நியூயார்க் மாகாணத்தின் நாசா கவுண்டி என்ற பகுதியில் உள்ளது. அங்குள்ள ஐசன் ஓவர் பூங்காவை சேர்ந்த இடத்தில் தான் மைதானம் அமைக்கப்பட்டது. அங்கு கோல்ஃப் விளையாட்டுகான மைதானம் இருந்தது. மேலும் அது சுற்றுலா தளமாகவும் விளங்கியது.
அந்த இடங்களை எல்லாம் டி20 உலக கோப்பைக்காக தற்காலிகமாக மூடிய அதிகாரிகள், ஐசன் ஓவர் பூங்காவில் இந்த தற்காலிக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி இருந்தார்கள். தற்போது இந்தியா தனது குரூப் சுற்று போட்டிகளை விளையாடி முடித்த நிலையில் உடனடியாக அந்த மைதானத்தை தகர்த்து எறியும் வேலைகள் தொடங்கியது. இன்னும் சில நாட்களில் ஆடுகளம் இருக்கும் பகுதியை தவிர்த்து, இருக்கைகள் இருக்கும் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.
ஆடுகளத்தை மட்டும் அப்படியே விட்டுவிட அங்குள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அங்கு இருக்கும் நான்கு பிட்ச்களும் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் கூறப்படுகிறது. இது அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டிகளை காண வந்த கிரிக்கெட் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.