மும்பை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் உத்தேசப்பட்டியலில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டில் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான அட்டவணை மற்றும் மைதான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் 1ஆம் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. இதனையொட்டி அனைத்து அணிகளும் வீரர்கள் தேர்வுக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சந்தித்தனர். அப்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் 20 வீரர்களை கொண்ட இந்திய அணியின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் விக்கெட் கீப்பர்களுக்கான ரேசில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட், அனுபவ வீரரான கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவருமே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் விளையாடிய ஜித்தேஷ் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.
அவருக்கு ஐபிஎல் தொடரில் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அவர் பயன்படுத்தி கொள்ளவில்லை. அதேபோல் மும்பை அணிக்காக ஆடி வரும் தொடக்க வீரர் இஷான் கிஷனின் பெயரும் சேர்க்கப்படவில்லை. இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன், 161 ரன்களை விளாசி இருக்கிறார். வான்கடே மைதானத்தில் மட்டும் மும்பை அணிக்கு தேவையான அதிரடி தொடக்கத்தை கொடுத்து வருகிறார்.
அணுகுமுறையை மாற்றி அதிரடியாக விளையாடி வரும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படாததற்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளே காரணமாக அமைந்துள்ளது. பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தியும் அவர் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் இருந்ததே அவர் தேர்வு செய்யப்படாததற்கு காரணமாக கூறப்படுகிறது.