சென்னை : டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை எந்த வீரர் பிடிப்பார் என்று அம்பத்தி ராயுடு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அதிக ரன்களை விளாசி ஆரஞ்ச் கேப்பை வென்றார். 15 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 741 ரன்களை விராட் கோலி விளாசினார். இருந்தாலும் ஆரஞ்ச் கேப்பை வெல்வதால், எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறி சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு காட்டமாக விமர்சித்தார்.

இதனால் விராட் கோலி ரசிகர்கள் பலரும் அம்பத்தி ராயுடுவை கடுமையாக திட்ட தொடங்கினர். இதற்கும் அம்பத்தி ராயுடு கூலாக பதில் சொல்ல, சோசியல் மீடியாவே ரணகளமானது. இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை டி20 உலகக்கோப்பை தொடர் பக்கம் திரும்பியுள்ளது. நேற்றிரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட விராட் கோலி, இன்று இந்திய அணியுடன் இணையவுள்ளார்.
இதனால் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய வீரர்கள் குறித்து தங்களது கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அம்பத்தி ராயுடு பேசுகையில், என்னை பொறுத்தவரை இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தான் அதிக ரன்களை விளாசி முதலிடத்தை இருப்பார் என்று கருதுகிறேன். ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ரோகித் சர்மா அபாரமான ஃபார்மில் இருந்தார். ஐசிசி தொடரில் ரோகித் சர்மா எப்படியான வீரர் என்று அனைவருக்கும் தெரிந்தது தான் என்று தெரிவித்துள்ளார். இதனால் விராட் கோலி ரசிகர்கள் மீண்டும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஏனென்றால் ஐசிசி தொடர்களில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் விராட் கோலி தான். 2014 டி20 உலகக்கோப்பை, 2016 டி20 உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பை, 2023 உலகக்கோப்பை என்று ஏராளமான முறை அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இதனால் அம்பத்தி ராயுடு விராட் கோலி மீது வன்மத்தை வெளிப்படுத்தி வருவதாக ஆர்சிபி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.