மும்பை : உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய டி20 அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இளம் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் பெயர் இடம் பெறவில்லை. கடந்த ஜனவரி 2024 வரை ரவி பிஷ்னோய் சர்வதேச டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். இப்போது அவர் அதே தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.
அப்படி இருந்தும் அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை. 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் பிட்ச்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் இந்திய அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது.

சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களைத் தவிர்த்து குல்தீப் யாதவ், சாஹல் இடம் பெற்றுள்ளனர். சாஹல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாத நிலையில் சமீபத்திய ஐபிஎல் தொடர் ஃபார்ம் காரணமாக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரவி பிஷ்னோய் இடத்தில் தான் சாஹல் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
பிசிசிஐ ரவி பிஷ்னோய்-ஐ விட சாஹலே சரியான தேர்வு என கருதக் காரணம் அவர் அதிக விக்கெட்களை எடுத்தது தான். 2024 ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் ஆடி உள்ள சாஹல் 13 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவரது பவுலிங் சராசரி 23.53. ஸ்ட்ரைக் ரேட் 15.69. ஒரு ஓவருக்கு 9 ரன்கள் கொடுத்து இருக்கிறார் சாஹல்.
மறுபுறம் ரவி பிஷ்னோய் 9 போட்டிகளில் 5 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். அவரது பவுலிங் சராசரி 45. ஸ்ட்ரைக் ரேட் 30.8. இவர் ஒரு ஓவருக்கு 8.76 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார்.
சுப்மன் கில், ரிங்கு சிங் ஆகியோரும் ஐபிஎல் ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாத போதும் அவர்களை மாற்று வீரர்களாக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. ரவி பிஷ்னோய்க்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.