பிராவிடன்ஸ் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வலுவான அணிகளில் ஒன்றான நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது. இது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெற்றியின் பின்னணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான டிவைன் பிராவோ முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அணி வளர்ந்து வரும் அணிகளில் ஒன்று என்றாலும் உலகக் கோப்பை போன்ற முக்கியமான தொடரில் வலுவான அணிகளை வீழ்த்தி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் குரூப் "சி" பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக உகாண்டா அணிக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். அதை தொடர்ந்து நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது என்பதுதான்.
எந்த ஒரு இடத்திலும் எதிரணிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு அந்த அணியின் பவுலிங் திட்டம் சிறப்பாக இருந்தது. இதன் பின்னணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளருமான டிவைன் பிராவோ இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்காக மட்டும் பிராவோ-வை பவுலிங் ஆலோசகராக ஒப்பந்தம் செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் பிட்ச்களை பற்றி எளிதாக புரிந்து கொண்டு சிறப்பாக செயல்பட முடியும் என ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் நடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் போது இதே போல தங்கள் அணிக்கு முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜாவை ஆலோசகராக நியமித்திருந்தது ஆப்கானிஸ்தான் அணி. அப்போதும் முக்கிய அணிகளை எல்லாம் வீழ்த்தி இருந்தது.
அதேபோல 2024 டி20 உலகக் கோப்பை தொடரிலும் பிராவா-வை வைத்து நியூசிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான். தற்போது இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.