டரூபா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் தான் வீசிய 4 ஓவர்களையும் மெய்டனாக வீசி ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 3 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது முறையாக ஒரு பவுலர் நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கனடா அணியின் சாத் பின் சபார் பனாமா அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசி 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையை முந்தி இருக்கும் பெர்குசன் தற்போது நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசியதோடு அவரை விட ஒரு விக்கெட் கூடுதலாக வீழ்த்தி இருக்கிறார்.

இந்தப் போட்டியில் பப்புவா நியூ கினியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிதான ஆட்டம் ஆடியது. அப்படி இருந்தும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து கொண்டே வந்தது. கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்ற பப்புவா நியூ கினியா 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
நியூசிலாந்து பணியின் ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்களையும், டிம் சவுதி 2 விக்கெட்களையும், லாக்கி பெர்குசன் 3 விக்கெட்களையும், இஷ் சோதி 2 விக்கெட்களையும், மிட்செல் சான்ட்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து 79 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த நியூசிலாந்த அணி முதல் ஓவரிலேயே துவக்க வீரர் ஃபின் ஆலன் விக்கெட்டை இழந்தது.
அவர் இரண்டு பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அதன் பின் மற்றொரு துவக்க வீரர் டெவான் கான்வே பொறுப்பாக ரன் சேர்த்தார். இதனிடையே ரச்சின் ரவீந்திரா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 35 ரன்கள் சேர்த்த டெவான் கான்வே எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இணைந்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 12.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 79 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்திருந்தது. அதனால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நியூசிலாந்து இழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.