டரூபா: டெஸ்ட் போட்டி போல பேட்டிங் செய்த உகாண்டா அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் 40 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சி பிரிவில் நியூசிலாந்து மற்றும் உகாண்டா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

இந்த குரூப்பில் இடம் பெற்று இருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டதால் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காக இந்த போட்டியில் விளையாடியது. அதிக அனுபவம் இல்லாத உகாண்டா அணி இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை சந்திக்க முடியாமல் திணறியது.
டெஸ்ட் போட்டி போல ஆடிய உகாண்டா அணி 18.4 ஓவர்களில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்களையும் இழந்தது. அதாவது 110 பந்துகளை சந்தித்து 40 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது உகாண்டா. அந்த அணியின் இரண்டு வீரர்கள் மட்டுமே 50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை தாண்டி ரன் சேர்த்திருந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் டெஸ்ட் போட்டி போல மிக நிதானமாக ஆடினர். தங்கள் விக்கெட்டை தற்காத்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி ஆடி இருந்தனர்.
நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட் 2, டிம் சவுத்தி 3, மிட்செல் சான்ட்னர் 2, லாக்கி பெர்குசன் 1, ரச்சின் ரவீந்தரா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 41 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து சேஸிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஃபின் ஆலன் தன் பங்குக்கு டெஸ்ட் போட்டி போல ஆடி 17 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
மற்றொரு துவக்க வீரரான டெவான் கான்வே அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். அவர் நான்கு ஃபோர் அடித்து இருந்தார். இதை அடுத்து 5.2 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தது நியூசிலாந்து அணி. இதன் மூலம் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து அணி.