நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, அடுத்து கனடாவை சந்திக்க உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை என்றால் இந்த தொடரில் இருந்து வெளியேறும் நிலையை எட்டும்.
அதே சமயம் கனடா அணி கத்துக்குட்டியாக இருந்தாலும் கூட கடந்த இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. குறிப்பாக பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் நியூயார்க் பிட்ச்சில் கனடா அணி 137 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இந்த பிட்ச்சில் ஆடிய அணிகளிலேயே அதிக ரன்கள் குவித்த ஒரே அணி கனடா மட்டுமே.

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கனடா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த போட்டியில் கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் இருந்தது. எனவே, நியூயார்க் பிட்ச்சில் பாகிஸ்தான் அணிக்கு கனடா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க் பிட்ச்சில் இதுவரை நடந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணி நூறு ரன்களுக்கு மேல் எடுத்தால் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் முதலில் ஆடும் அணி நூறு ரன்களுக்கு குறைவாக ரன் எடுத்தால் அதை இரண்டாவதாக ஆடும் அணி வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது.
அந்த வகையில் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் முதலில் பந்து வீசினால் நிச்சயமாக கனடா அணியை நூறு ரன்களுக்குள் சுருக்க வேண்டும். அப்போது மட்டுமே பாகிஸ்தான் அணி எந்த அழுத்தமும் இன்றி எளிதாக வெற்றி பெற முடியும். அதேபோல, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால் 120 முதல் 140 ரன்கள் வரை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போது பெரிய அழுத்தம் இன்றி இரண்டாவதாக பந்து வீச முடியும்.
ஒரு வேளை இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றாலும் கூட அடுத்து உள்ள போட்டியில் அயர்லாந்து அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அப்போது தான் நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.