நியூயார்க்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை எந்த பந்துவீச்சாளரும் செய்யாத மோசமான டி20 உலகக் கோப்பை சாதனை ஒன்றை செய்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி.
குரூப் "ஏ" பிரிவில் கனடா அணிக்கு எதிராக விளையாடியது பாகிஸ்தான் அணி. இந்தப் போட்டியில் கனடா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஆரோன் ஜான்சன் முதல் பந்தை சந்தித்தார். பாகிஸ்தான் அணிக்கு முதல் ஓவரை வீசினார் ஷஹீன் ஷா அப்ரிடி. அவர் வீசிய முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஆரோன் ஜான்சன் இரண்டு ஃபோர் அடித்தார்.

இதுவரை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் எந்த ஒரு பந்துவீச்சாளரின் முதல் இரண்டு பந்துகளிலும் பவுண்டரி அடிக்கப்பட்டது இல்லை. அந்த மோசமான சாதனையை செய்து இருக்கிறார் ஷஹீன் ஷா அப்ரிடி. கடந்த 2007 முதல் 2024 வரை 17 ஆண்டுகளில் ஒரு முறை கூட இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இதுவரை நடந்த எட்டு உலக கோப்பை தொடர்களில் எந்த பேட்ஸ்மேனும் முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஃபோர் அடித்தது இல்லை.
அந்த வகையில் ஷஹீன் ஷா தனது முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ஃபோர்களை விட்டுக் கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். இந்தப் போட்டியில் கனடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கனடாவின் துவக்க வீரர் ஆரோன் ஜான்சன் மட்டுமே 44 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி படுநிதானமாக இந்த 107 ரன்கள் இலக்கை சேஸிங் செய்தது. துவக்க வீரர் சயீம் அயூப் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 33 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடி பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.