நியூயார்க் : பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷாகீன் அப்ரிடி இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் அசார் மஹ்மூத் பதில் அளித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது.

இதனால் அமெரிக்கா அணி அடுத்த 2 போட்டிகளில் தோல்வியடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்று பற்றி சிந்திக்க முடியும். இதனிடையே கேப்டன்சி மாற்றம் காரணமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷாகீன் அப்ரிடி இடையில் மோதல் இருப்பதாகவும், இருவரும் இடையில் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்றும் தகவல் வெளி வந்துள்ளது.
பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் நேரடியாக இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் துணைப் பயிற்சியாளர் அசாம் மஹ்மூத் விளக்கம் அளித்துள்ளார். அதில், வாசிம் அக்ரம் அப்படி சொன்னாரா என்ற தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான் அணியில் அப்படி ஏதும் பிரச்சனைகள் இல்லை. பாபர் மற்றும் ஷாகீன் அப்ரிடி இருவரும் நல்ல நண்பர்கள், அவர்களுக்கு இடையிலான உரையாடலில் எந்த பிரச்சனையும் இல்லை.
அவர்கள் இருவருமே பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தான். கடந்த 2 போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்ததற்கு எந்தவொரு தனிப்பட்ட வீரரும் காரணமல்ல. அது ஒட்டுமொத்தமாக அணி மற்றும் நிர்வாகத்தின் தவறு தான். நாங்கள் எந்த வீரரையும் மறைக்கவோ, கட்டுப்படுத்தவோ இல்லை. பாகிஸ்தான் அணியில் எல்லாமே வெளிப்படையாக நடக்கிறது. ஒரு அணியாக வெற்றிபெறுவது எங்களின் பொறுப்பு மட்டுமல்ல, எங்களின் கடமையும் கூட தான்.
அதேபோல் தோல்வியின் போதும் நாங்கள் அனைவரிடம் பேசி செல்கிறோம். இன்று நான் வந்துள்ளேன். நேற்று கேரி கிறிஸ்டன் வந்தார். பாகிஸ்தான் ரசிகர்கள் எமோஷனலாகவர்கள். ஆனால் ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால், ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடிந்துவிடாது. தோல்வியின் போது நிச்சயம் மோசமான மனநிலையில் இருப்போம். அதிலிருந்து வெளி வருவதற்கு சில பொழுதுபோக்குகள் தேவை. பாகிஸ்தான் நிர்வாகிகள் உணவகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டதில் எந்த தவறும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.