மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தங்களுடைய சம்பிரதாய ஆட்டத்தில் அயர்லாந்தை இன்று துவம்சம் செய்தது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிய நிலையில் இந்த போட்டியின் முடிவு எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திருக்காது.
எனினும் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன் இழந்த மானத்தை கொஞ்சமாவது மீட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கியது. பாகிஸ்தான் அணி என்றாலே அவர்களுடைய வேகப்பந்துவீச்சு தான் மிகவும் பிரபலம்.

ஆனால் அந்த வேகப்பந்து வீச்சு இந்த தொடரில் கடுமையாக சொதப்பியது. குறிப்பாக அமெரிக்கா, இந்திய அணிக்கு எதிராக பெரிய அளவில் அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் சம்பிரதாய ஆட்டமான இன்று அயர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி அபாரமாக பந்து வீசி செயல்பட்டது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியின் டாப் 5 வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். குறிப்பாக ஷாகின் அப்ரிடி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அயர்லாந்து வீரர்கள் தடுமாறினர்.
பவர்பிளே முடிவதற்குள் அயர்லாந்து அணி 28 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு களம் இறங்கி எந்த வீரர்களும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. எனினும் கேரத் டேலனி 19 பந்துகளின் 31 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்சர் ஒரு பவுண்டரி அடங்கும்.
இதேபோன்று வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் லிட்டில் 18 பந்துகளில் 22 ரன்கள் சேர்க்க அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷாகின் அப்ரிடி மூன்று விக்கெட்களும்,முகமது அமீர் இரண்டு விக்கெட்களும் இமாத் வசீம் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.