மும்பை: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒரு சுயநலவாதி என்று இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் அதிரடி வீரரான ஃபகர் ஜமான் கீழ் வரிசையில் இறக்கப்பட்டு, தொடக்க வீரராக களமிறங்கும் பாபர் அசாம் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் எப்படி வெற்றிபெற முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரை 2வது முறையாக வென்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அந்நாட்டு கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த முறை டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்று பாகிஸ்தான் அணி தோல்வியடைந்திருந்தது.

ஆனால் இம்முறை குரூப் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் சூப்பர் ஓவர் முறையில் தோல்வியடைந்த பாகிஸ்தான், சூப்பர் 8 சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. இதற்கு பாகிஸ்தான் அணி வீரர்களின் மோசமான செயல்பாடும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் அதிகார அரசியலுமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஒரு மாதத்திற்கு முன் பாபர் அசாம் கைகளில் மீண்டும் கேப்டன்சி அளிக்கப்பட்டது. அவருக்கு ஏற்கனவே பாகிஸ்தான் அணியை வழிநடத்திய அனுபவம் இருந்தும், பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல், பாபர் அசாம் மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அதில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக அதிரடியாக விளையாடக் கூடிய வீரரான ஃபகர் ஜமான் நம்பர் 4க்கு தள்ளப்பட்டுள்ளார். தேசிய அணியின் கேப்டனே, சுயநலமாக முடிவுகளை எடுத்து விளையாடினால், அந்த அணியால் எப்படி கோப்பையை வெல்ல முடியும். இந்த குற்றச்சாட்டை நான் மட்டும் முன் வைக்கவில்லை. வாசிம் அக்ரம், வாக்கர் யூனுஸ் உள்ளிட்டோரும் கூறியிருக்கின்றனர்.
பாகிஸ்தான் அணியில் டி20 வடிவத்திற்கான வீரர்கள் இல்லை. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 150 முதல் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்களே இருக்கின்றனர். சர்வதேச அணிகளுக்கு இணையாக பாகிஸ்தான் அணியால் ஈடுகொடுத்து ஓட முடியவில்லை என்று விமர்சித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பாபர் அசாம் - விராட் கோலி இருவரையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.