மியாமி : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவி தற்போது தாயகம் திரும்புகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக 120 ரன்கள் கூட எடுக்க முடியாமல் தோற்றது. இதனால் பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி ரசிகர்கள் தங்களுக்கு கடினமான கால கட்டங்களில் ஆதரவு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் நாங்கள் நன்றாக விளையாடும் காலகட்டத்தில் அனைவரும் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
ஆனால் எங்களுடைய கடினமான காலகட்டத்தில் மட்டும்தான் உண்மையான ரசிகர்கள் துணை நிற்பார்கள். நாங்கள் ஒன்றும் தெரு கிரிக்கெட் விளையாடும் அணி கிடையாது. இது உங்களுடைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. எங்களுக்கு நீங்கள் இது போன்ற சூழலில் ஆதரவு அளிக்கவில்லை என்றால் நீங்களும் இந்த மீடியா போல் தான்.
நான் தொடர்ந்து 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிக்கொண்டு தான் இருக்கின்றேன். இந்த தொடரிலும் அப்படி தான் வந்து வீசினேன். நான் விக்கெட்டுகளை எடுத்தால் அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆனால் விக்கெட் எடுக்கவில்லை என்றால் அனைவரும் எங்களுக்கு எதிராக விமர்சிக்கிறார்கள் என்று ஷாகின் ஆப்ரிடி கூறினார்.
இந்த நிலையில் ஷாகின் அப்ரிடிக்கும் பாபர் அஸ்ஸாமுக்கும் மோதல் ஏற்பட்டு இருப்பதாகவும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் இது உண்மையா பொய்யா என்று இது தொடர்பாக ஷாகின் அப்ரிடி இதுவரை விளக்கமே தரவில்லை. இப்படி பல்வேறு பிரச்சனைகள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நிலவி வருவதே அந்த அணியின் பின்னடைவுக்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.